“உம்மாச்சி தாத்தா” (பெரியவா) வாழ்க்கை வரலாறு
காஞ்சி மஹா பெரியவர 1894 ஆம் ஆண்டு அனுஷம் நட்சத்திரத்தில் மே 20 ஆம் தேதி, விழுப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுவாமிநாதன். வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் அனைத்தையும் ஆழமாக கற்றவர். இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள், காஞ்சி முனிவர் என அழைக்கப்பட்டார்.
இயல்பான அறிவுக்கூர்மையும் ஆன்மிக நாட்டம் கொண்டவர். சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். கல்வெட்டில் இருக்கும் மொழிகளை இலக்கணத்தோடு விவாதிக்கும் திறமை பெற்றவர். தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்து மதத்தின் தத்துவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.
மூன்று முறை கால்நடையாகவே இந்தியா முழுவதும் வலம் வந்து பக்தி நெறியை பரப்பியுள்ளார். மனிதர்களிடமும் விலங்குகளிடமும் அன்பு செலுத்தி வந்தார். அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் என யார் வந்தாலும் அனைவரிடமும் சமமான கருணையும் நேசமும் காட்டுவார். சாப்பிடுவதற்கு எண்ணற்ற உணவுகள் வந்தாலும் அதனை தவிர்த்து நெல், பொரி போன்ற உணவுகளை உண்ணுவார். அதுவும் ஒரு வேளை மட்டும்.
அந்நியத் துணிகளுக்கு எதிராக சுதேசி இயக்கம் நடந்த போது கதர் ஆடைக்கு மாறினார். தனது சீடர்களையும் அவ்வாறே செய்யுமாறு அறிவுறுத்தினார். காஞ்சி மடத்தின் தலைவராக 87 ஆண்டுகள் இருந்து வந்தார். உண்மையான துறவு வாழ்க்கையை வாழ்ந்தவர்.
கடவுள் நம்பிக்கையற்ற எம் ஆர் ராதா, கண்ணதாசன் போன்றவர்கள் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியாக மாறினார்கள். நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது.
கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள். நூறாண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மகான், தற்போதும் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் அமைந்துள்ள அதிஷ்டானத்தில் சூட்சுமமாய் இருந்து அருள்பாலிக்கிறார்.