Sunday, October 15, 2023
HomePurana Kathaigalஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 10

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 10

ஆகாசராஜனின் அரசாட்சியில் மக்கள் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். வெகு காலம் ஆகியும் அவனுக்கு குழந்தைப் பேறு இல்லை. ஆகவே மனம் ஒடித்து போனவன் குழந்தை வரம் வேண்டி பல யாகங்களை செய்தவண்ணம் இருந்தான். அவர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத தானங்கள் இல்லை. எதற்குமே பலன் தெரியவில்லை என்பதினால் முடிவாக புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றை செய்யத் துவங்கினார். அந்த யாகத்தில் நெல்லை நெய்வித்தியமாகப் படைத்து, யாக முடிவில் ஒரு விளை நிலத்தில் மன்னனே கலப்பையினால் சிறு இடத்தை உழுது, அந்த நெல்லை அதில் பயிரிட்டு மனைவியுடன் லஷ்மி நரசிம்ம பூஜையை அந்த நிலத்திலேயே செய்து ‘ஐயனே இந்த நெல் முளைத்து பயிராகி தானியத்தை தருவது போல எனக்கும் ஒரு குழந்தை எனும் தானியத்தை தர வேண்டும்’ என வேண்டிக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூற மன்னனும் முழு நம்பிக்கையுடன் அந்த யாகத்தை செய்து முடித்தப் பின், அந்த நெய்வித்தியம் செய்த நெல்லை ஒரு விளை நிலத்துக்குப் எடுத்துப் போய், லஷ்மி நரசிம்ம பூஜையை அந்த நிலத்திலேயே செய்து முடித்தப் பின் அந்த நெல்லைப் விதைக்க கலப்பையால் ஒரு இடத்தை உழத் துவங்கினார்.

நிலத்தை உழுது கொண்டிருந்த மன்னனின் கலப்பையில் எதோ பெட்டி ஒன்று இடிக்க, அதை வெளியில்எடுத்துப் பார்த்தால் அந்தப் பெட்டியில் உயிருடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார்
என்ன ஆச்சர்யம், நிலத்தை உழத் துவங்கியவனின் கலப்பையில் எதோ இடிக்கும் சப்தம் கேட்க, உழுவதை நிறுத்தி விட்டு, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அங்கு பூமியை தோண்டினால் அதில் ஒரு பெட்டி புதைந்து இருந்தது தெரிய வந்தது. எதோ ஒரு புதையலாக இருக்கலாம் என அதை வெளியில் எடுத்துப் பார்த்தவர் அதிர்ந்து நின்றார். அதில் ஒரு அழகிய பெண் குழந்தை இருந்தது. அது எப்படி இருந்தது என்றால் பத்மாசனத்தில் அமர்ந்து இருந்த காட்சியில் சிரித்துக் கொண்டு இருந்தது. மன்னனும் மக்களும் விக்கித்து நின்றார்கள். பூமியில் புதைந்து இருந்த பெட்டியில் உயிருடன் குழந்தையா? நம்பவே முடியவில்லை. ராஜ குரு ஓடோடி வந்தார். மன்னனிடம் கூறினார் ‘மன்னா, இது சாதாரணக் குழந்தை அல்ல. இது சரித்திரம் படைக்க வந்துள்ள தெய்வீகக் குழந்தை. இந்தக் குழந்தையின் முகத்தில் ஓடும் ரேகைப் பார்! அப்படியே லஷ்மி கடாட்ஷம் அல்லவா நிறைந்துள்ளது. முதலாவது பூமியில் புதைந்து இருந்த பெட்டியில் உயிருடன் இருந்தது தெய்வீக அதிசயமே. மேலும் முன்னர் மன்னன் தசரதனுக்கு பூமியில் புதைந்து இருந்த பெட்டியில் இருந்து சீதை கிடைத்தது போலவேதான் உமக்கும் இவள் கிடைத்து இருக்கிறாள். ஆகவே இவள் சீதையின் அம்சமான லஷ்மி தேவியாகக் கூட இருக்கலாம். தயங்காதே. குழந்தை இல்லாத உனக்கு விளை நிலத்தில் இருந்து தானியத்தை தரும் நெல் பயிர் போல தெய்வமே ஒரு குழந்தையை தந்துள்ளது. ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் உன் குழந்தையாக வளர்த்து வா. இனி நீதான் இந்தக் குழந்தையின் தகப்பன்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட மன்னனும் சற்றும் தயங்கவில்லை. தன் மனைவியிடம் அந்தக் குழந்தையைத் தந்து அதை நன்கு பேணி வருமாறு கூறினான். குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து பெரும் விழாக் கொண்டாடி அனைவருக்கும் தானங்கள் செய்தார். பெட்டியில் இருந்தக் குழந்தை பத்மாசனத்தில் இருந்தக் காட்சியில் இருந்ததினால் அதற்கு பத்மாவதி என்று பெயர் சூட்டி வளர்க்கலாயினர். அந்த பத்மாவதிதான் லஷ்மி தேவியின் அவதாரம்.

அந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து இதை நீதான் உன் குழந்தையாகவே பாவித்து நன்கு வளர்க்க வேண்டும் என மன்னன் தனது மனைவியிடம் கூறினார்.

ஒவ்வொரு கடவுளுக்கும் பல அவதாரங்கள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை தவிர மற்ற அனைத்துமே துணை அவதாரங்கள். இருப்பது போல காணப்பட்டு, அப்படியே மறைந்தும் விடுவார்கள் என்று முன்னர் கூறி இருந்தேன் அல்லவா ! இப்படியாகத்தான் லஷ்மி தேவியானவள் முன் பிறவியில் தான் எடுத்த சீதையின் அவதாரத்தில் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு நிழல் அவதாரத்தை எடுத்திருந்தாள். லஷ்மியே முன் ஜென்மத்தில் வேதவதியாக தோன்றி சீதையைக் காப்பாற்றியவள். ஆனால் அந்த ஜென்மத்தில் லஷ்மி தேவியின் துணை உருவே வேதவதி என்பதை அறிந்திடாத ராமபிரான் வேதவதியும் தன்னை மணந்து கொள்ளுமாறு அனைவர் முன்னிலையிலும் அவரைக் கேட்டபோது அவளை ஸ்ரீனிவாச அவதாரத்தில் மணப்பதாக உறுதி அளித்து இருந்ததினால் லஷ்மி தேவியானவள் இப்போது வேதவதிக்காக, அதாவது தனது மாய அவதாரத்துக்கு கிடைத்த உறுதி மொழியைக் காப்பாற்ற தானே பத்மாவதி எனும் பெயரில் அவதரித்து ஆகாசராஜனின் குடும்பத்தில் வளர்ந்து வரலானாள். அவள்தான் ஸ்ரீனிவாசரை மணக்க உள்ளவள். ஆமாம் லஷ்மி தேவி ஏன் ஆகாசராஜனுக்கு மகளாக அவதரிக்க வேண்டி இருந்தது? அது ஒரு சிறியக் கதை. அதையும் கூறுகிறேன்.

அது சரி, லஷ்மி தேவி பத்மாவதியாக அவதரித்து விட்டாள். ஸ்ரீனிவாசர் எங்கே அவதரித்து உள்ளார்? அவர் கதை என்ன?

முதலில் ஆகாசராஜனுக்கு லஷ்மி ஏன் பிறந்தாள் என்பதை தெரிந்து கொண்டப் பின், ஸ்ரீனிவாசர் பிறந்த கதையையும், ஸ்ரீனிவாசர்- பத்மாவதியின் திருமணக் கதையையும் படிக்கலாம். ஆகவே இப்போது ஆகாசராஜனுக்கு ஏன் லஷ்மி தேவி மகளானாள் என்ற கதையைப் பார்க்கலாம்.

………தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − ten =

Most Popular