அன்னையின் நவசக்தி வடிவங்கள்!
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !
துர்க்காயை ச தீமஹி !
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
மனிதனின் வாழ்க்கைத் தேவை அருளோடு வரும் பொருள் வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள். சாக்தசமயமும், சைவ சமயமும் அன்னைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக சிறப்பிக்கிறதோ அதே அளவிற்கு, வைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது. சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவியானவள், வைஷ்ணவத்தில்
ஆதிலக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, மஹாலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வீரலக்ஷ்மி என்ற அஷ்ட லக்ஷ்மிகளாக போற்றி வணங்கப்படுகிறாள்.
அன்னை 9 வடிவமாக பக்தர்களால் பார்க்கப்படுகிறாள். அன்னையின் இந்த 9 வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன. அது என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…..
அன்னையின் 9 வடிவங்கள் என்னென்ன?
மனோன்மணி, சர்வபூதாமணி, பிரதமணி, பலவிகரணி, கலவிசரணி, காளி, ரௌத்ரி, சேஸ்றா, வாமை ஆகியவை ஆகும்.
முதலாவதாக – மனோன்மணி – பக்குவப்பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி, களைந்து பரமாத்மாவோடு இணைப்பதாகும்.
இரண்டாவதாக – சர்வபூதாமணி என்ற உருவத்தோற்றம் உயிர்களோடு ஒன்றி கலந்து அதன் பாவங்களை விலக்குவது ஆகும்.
மூன்றாவதாக – பூமியில் விஷக் கிருமிகள் பெருகாமல் சூரிய சக்தியால் நல்லவைகளை வளரச் செய்யும் பல பிரதமணி உருவம் ஆகும்.
நான்காவதாக – சந்திரனில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியைக் கொண்டு பயிர் பச்சைகளை, உயிர் இனங்களை தழைத்தோங்கச்செய்யும் பலவிகரணி வடிவாகும்.
ஐந்தாவதாக – கலவிசரணி – வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்க செய்வது ஆகும்.
ஆறாவதாக – காளி – காற்றில் பிரணவமாய் நிற்கும் உருவம் ஆகும்.
ஏழாவதாக – ரௌத்ரி – நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர்வளரச்செய்யும் உருவம் ஆகும்.
எட்டாவதாக – தண்ணீரில் குளிர்ச்சியையும் ஜீவசக்தியையும் நிலைபெற செய்யும் சேஸ்றா உருவமாகும்.
ஒன்பதாக – ஐம்பூதங்களையும் ஆட்சிசெய்யும் வாமை உருவம் ஆகும்.
இந்த நவ சக்தியரைக் குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்களான வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, தோடு, அட்சதை, கண்ணாடி வளையல்கள், ரவிக்கை ஆகிய 9 பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து பிரசாதம் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
