Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamஅஷ்ட புஷ்பங்கள் என்னென்ன தெரியுமா?

அஷ்ட புஷ்பங்கள் என்னென்ன தெரியுமா?

அஷ்ட புஷ்பங்கள் என்னென்ன தெரியுமா?

புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம்.

தோஷமில்லாத, அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத விடியற்காலத்தில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இதைத்தான் “நன் மாமலர்” என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். இறைவன் சிவபெருமான் பூஜைக்கு ஏற்றதாகச் சொல்லப்படும் அஷ்ட புஷ்பங்கள் எவை என்று தெரியுமா?

புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை என்பவையே அஷ்ட புஷ்பங்களாகப் பூஜைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
புன்னை இம்மரம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுவது.

மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , “மட்டிட்ட புன்னையங்கானல்” என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும், வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக்காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும்.

சண்பகம்:

வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூடியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருப்பவை. செண்பகவல்லி என்று அம்பாளுக்கும், செண்பகாரன்யேச்வரர் என்று சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.

பாதிரி:

நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரக்கூடியது. இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருட்சமாகக்கொண்ட தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

வெள்ளெருக்கு:

வெள்ளெருக்கும் பாம்பும் சுவாமியின் ஜடையில் விளங்குவதை, “வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை” என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி, சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ தலத்தில் இம்மரம் விருட்சமாக விளங்குகிறது.

நந்தியாவர்தம்:

நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர்.

தாமரை:

தாமரையில் மகாலட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத்தாமரை மலர் குளங்களிலும், நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப்புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.

ஊமத்தை, மந்தாரை, மகிழம்பூ போன்ற புஷ்பங்களையும் இறைவன் சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும், மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த “எட்டு நாண்மலர் ” கொண்டு இறைவனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.

நீலோத்பலம்:

நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். “குவளைக்கண்ணி ” என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை என்று பெயர்.

அரளி:

மாலை கட்டவும், அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்படும். ஆண்டு முழுவதும் பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =

Most Popular