ஸ்வஸ்திக் இரகசியம்!
சின்னங்கள் அல்லது குறியீடுகளின் முக்கியத்துவம் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கு மிக.வும் அவசியமானதாக இருப்பதோடு, உலக நாடுகள் அனைத்திலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சின்னங்கள் தனி நபரது வாழ்க்கை முறைகளிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் உண்டு.
ஸ்வஸ்திக் சின்னம்: யஜூர் வேதத்தில் இதை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இந்த குறியீடு உள்ளது. வேத பிரார்த்தனையில் உள்ள “ஸ்வஸ்தி” என்ற வார்த்தை “தடைகள் இல்லாத நல்வாழ்வு” என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்த நிலையை ஏற்படுத்தும் சின்னமாக “ஸ்வஸ்திகா” எனப்படும் “ஸ்வஸ்திக்” என்று பயன்படுத்தப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் வலது கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தின் வடிவமே “ஸ்வஸ்திக்” என்றும் ஒரு கருத்து இருக்கின்றது. செங்கோண வடிவத்தில், மேலிருந்து கீழாக மற்றும் இடமிருந்து வலமாக, ஒன்றுக்கு ஒன்று குறுக்காக செல்லும் கோடுகள் மூலம் இவ்வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னத்தில் இருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிப்பதாகவும், அந்த திசைகளிலிருந்து புறப்படும் சுப காரிய தடையை உண்டாக்கும் சக்திகளை “ஸ்வஸ்திக்” தடுப்பதாகவும் ஐதீகம் உண்டு.
இந்திய ஆன்மிக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள் ஆகிய சகல இடங்களிலும் “ஸ்வஸ்திக்” வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.
கருடன் திருத்தலங்கள்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தரும் கருடனை தரிசிக்கலாம். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்கிறார்கள்.
கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு, சக்கரம் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பைராகிமடம் திருவேங்கடம் ஏழுமலையான் ஆலயத்தில், பெண் வடிவிலான கருடனை தரிசிக்கலாம். கார்த்திகை மாத உற்சவத்தின் போது, அலர்மேலுமங்கைத் தாயார் இந்த பெண் கருட வாகனத்தில்தான் வீதி உலா வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில், கருவறையில் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் ஆகியோருடன் கருடாழ்வாரும் வீற்றிருக்கிறார். பொது வாக இறைவனின் கருவறைக்கு நேர் எதிரிலேயே காட்சி தரும் கருடன், இந்த ஆலயத்தில் கருவறைக்குள் வீற்றிருப்பது விசேஷமானதாக சொல்லப்படுகிறது.
