திருவண்ணாமலை கிரிவலம் வழிமுறை பலன்கள்!

37

திருவண்ணாமலை கிரிவலம் வழிமுறை பலன்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வழிபட்டு கிரிவலம் வர ஏராளமான பலன்கள் உண்டு. அப்படி கிரிவலம் வர எங்கேயாவது தொடங்கி, எங்கேயாவது முடிக்க கூடாது. மலையை சுற்றி 14 கிமீ நடந்து செல்ல வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்ல கூடாது. இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். கிரிவலம் வரும் போதும் எப்போதும் சிவனின் ஓம் நமசிவாய நமத்தை உச்சரித்துக் கொண்டே சுற்ற வேண்டும்.

மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. பொதுவாக கிரிவலம் வருவதற்கு எல்லா மாதங்களுமே கிரிவலம் வருவதற்கு ஏற்ற மாதங்கள் தான். அதிலேயும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களுமாகும்.

இந்திர லிங்கம்:

கிரிவலம் வரும் போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் தொடங்கி, முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் கிரிவலம் முடித்ததாக அர்த்தம். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து கிரி வலம் வர ஆரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்குவதற்காக அஷ்டதிக்கு பாலகர்களில் கிழக்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை வழிபடவேண்டும்.

அக்னி லிங்கம்:

பிறகு மலை சுற்றும் சாலையில் நந்திகேசுவரர் சன்னதி உண்டு. இங்கு வணங்கி வழிபட்டு தான் மலைவலம் வரவேண்டும். ஏனெனில் மலை சுற்றுகையில் நமக்கு சிவன் அளித்த அதிகார மூர்த்தி இவர். அடுத்து தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தின் கரையில் அரிச்சந்திர மகாராஜாவின் சிலை ஒன்றும் உள்ளது. அதன் வழியே சென்றால் பிருங்கி மகரிஷி முனிவரின் வழிபாட்டு தலம் உள்ளது.

எமலிங்கம்:

தெற்கு திசைக்கு அதிபதி எமன் பூஜை செய்து வழிபட்டு எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற ஐதீகம் உள்ளது. இங்கு தியானம் செய்தால் நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள் மறையும் நினைக்கின்ற செயல்கள் நிறைவேறும். அடுத்து மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மஞ்சள் கயிற்றில் தொட்டில் செய்து அங்குள்ள மரத்தில் தொங்குவதை காணலாம். இந்த மரத்தில் அங்ஙனம் கட்டினால் குழந்தை வரம் அளிப்பதாக கூறப்படுகிறது

நிருதி லிங்கம்:

தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி சிவனை வழிபட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை பார்க்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் நந்தியின் தலை திரும்பி நம்மை பார்ப்பது போல் இருக்கும்.

அதை வணங்கி செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதி, ராகவேந்திரா ஆலயம், முருகன் ஆலயம் உள்ளது. இங்குள்ள முருகன் சிலை பழநி மலை சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்டது. பழநியில் நவபாஷாண சிலை அமைத்த போகர் இங்கு மூலிகைகளால் சிலை அமைத்தார் (இந்த சிலை நவாப்புகள் காலத்தில் திருட்டு போய்விட்டது).

அடுத்து இராஜ ராஜேஸ்வரி ஆலயம் புதுப்பித்து புத்தொளியுடன் இருக்கிறது. இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு நேர் எதிரில் மலை அடிவாரத்தில் கண்ணப்பர் கோயில் அமைதியான சூழ்நிலையில் குளிர் மரங்களுக்கு இடையில் இருக்கிறது. தியானத்திற்கு ஏற்ற இடம். சாதுக்களும், ஆங்கிலேயரும் இங்கு தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இராஜ ராஜேஸ்வரி ஆலயம் அடுத்து, கவுதம மகரிஷி கோயில் இருக்கிறது. கவுதம மகரிஷி இங்கு வந்து வழிபாடும், நிஷ்டையிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

வருண லிங்கம்:

அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட லிங்கம் உள்ளது. அதன் பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். அருகில் மாணிக்க வாசகர் கோயில் உள்ளது. அகஸ்தியர் குளம் உள்ளது.

வாயு லிங்கம்:

வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயு லிங்கம் உள்ளது.

குபேர லிங்கம்:

வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேரன் லிங்கம் உண்டு.

இடுக்கி பிள்ளியார் கோயில்:

அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது. இதனை கோயில் என்று சொல்லுவதை விட சுளுக்கும், உடல் வலி தீர்க்கும் இடம் எனலாம். முன்காலத்தில் கடவுளின் பெயரை கூறி பக்தியும், ஒழுக்கத்தினை வளர்த்தார்கள். அதே போல் இதுவும் ஒன்று. இந்த கோயிலில் நுழைத்து ஒருக்களித்து வெளியே வரவேண்டும். ஒரு அடி அகலத்தில் உடம்பை ஒருகளித்த படி வரவேண்டும். அப்படி இல்லை என்றால் உடம்பு சிக்கி கொள்ளும். அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.. அப்போது உடம்பில் ஏதாவது சுளுக்கு, வலி இருந்தால் விலகிவிடும். அதனால் தான் ஐம்பூதங்களையும் அடக்கினால் தான் வாழ்வில் உயர்வடைய முடியும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இடுக்கு பிள்ளையார் காட்டுகிறார்.

ஈசான லிங்கம்:

இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக் கூடியது. அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபாரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூர்ணத்துவம் அடைகிறது. எல்லா தீர்த்தங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்றாலும், துர்க்கையம்மன் கோயிலுக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது. மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் (கட்கம் என்றால் வாள்) வீசி தோற்றுவித்தது.