மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் இது!
உங்களது ராசிக்கு பூமிக்காரன் செவ்வாய் பகவான். ஆனால், உங்களது வீட்டை நிர்ணயிப்பது என்னவோ புதன் பகவான். செவ்வாய் பகவான், புதன் பகவானுக்கு பகை கிரகம். ராசி அதிபதியான குருபகவானும், செவ்வாய் பகவானும் நட்பாக வருகிறது. இதன் காரணமாக உங்களது ராசிக்கு எப்படியாவது சொந்த வீடு அமைந்துவிடும். ஆனால், அதுவா வந்தா வரட்டும் என்ற மனநிலை வேண்டாம். கையில் காசு சேரட்டும் என்று நினைத்தால் காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான்.
வாங்குற சம்பளத்தில் வீட்டு லோன்ல சிக்கினா கையில பெரிசா பணம் மீறாது. அப்புறம் அன்றாட செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும். ‘‘கல்யாணம் பண்ணினா புது வீட்டுல போய்த்தான் வாழணும்னு உறுதியா இருந்தேன்’’ என்று உங்களில் சிலர் சொல்வீர்கள். வீடு சிலருக்கு திடீரென அமையும். காலையில போன்… மதியம் அட்வான்ஸ்… என்று உங்களுக்கே தெரியாமல் நிகழ்ந்துவிடும். வக்கீல், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆசிரியர் போன்றோர் உங்களின் எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் இருப்பார்கள். எப்போதுமே வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் இடத்தை வாங்குங்கள்.
அதன் பிறகு உங்களது பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு தங்காது. அதாவது உங்களது பெயரில் நீங்கள் வீடு வாங்கினால் அது தங்காது. தெற்கு, தென்கிழக்கு திசையை பார்த்தவாறுதான் உங்களது வீட்டின் தலைவாசல் இருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்குப் பகுதியில் வீடு அமைந்தால் அதிர்ஷ்டத்தைத் தரும். செம்மண், மணல் பூமியாக இருப்பின் நல்லது. உங்களுக்கு எல்லா தளங்களுமே ஏற்றதாகும். பூர்வீகச் சொத்தில் ஒரு பாதியை விற்றுவிட்டு வேறிடத்தில் வீடு வாங்குவீர்கள். கட்டிடக்காரகனான சுக்கிரன் உங்கள் நட்சத்திர நாயகனான சனிக்கு அதி நட்பாக இருப்பதால் கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். அதே சமயம் தனியார் வங்கிக் கடன்கள் எளிதாக கிடைக்கும்.
வீடு கட்டுவதற்குரிய இடத்திலுள்ள எல்லாவற்றையும் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். மீன ராசிக்கு வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் மிதுன புதன். மிதுனம் என்றாலே இரட்டை என்பது பொருள். புதன் உங்களின் இல்லக்கனவை நிறைவேற்றுபவராக வருவதால், புதனுக்கு சக்தியைக் கொடுக்கும் பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. எனவே இரட்டை திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வர வேண்டும். அரவிந்தலோசனன், தேவபிரான் எனும் திருநாமங்களோடு பெருமாள் தனித்தனி கோயில்களில் சேவை சாதிக்கிறார். திருநெல்வேலியிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
