தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும் சுறா புட்டு!
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிகச் சிறந்த உணவாகும். சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற பெயரும் உண்டு. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். சரி சுறா புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
சுறா மீன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
மல்லி தூள் – ½ ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 20 பல் பெரியது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – ½ ஸ்பூன்
செய்முறை:
சுறா மீனை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை எல்லாம் எழுத்து கழுவிவிட்டு இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சுத்தம் செய்த சுறா மீனை கொதித்த தண்ணீரில் 5 முதல் 8 நிமிடங்கள் வரையில் போட்டு வைக்க வேண்டும். இப்போது சுறா மீனை சுடு தண்ணீரிலிருந்து எடுத்த் மீனின் மேல் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு மீனை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீனில் சிறிதளவு கூட தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து மீனை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி விட வேண்டும். மீனில் மசாலா முழுவதும் இறங்குவது போன்று கலந்து விட வேண்டும். அதன் பிறகு ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும். ஒரு 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறிவிட வேண்டும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை போட்டு கிளறிவிட்டால் சுறா புட்டு கம கமக்கும்.