சுவையான குடைமிளகாய் புதினா புலாவ் வித் வெள்ளரிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க…
புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கப்
குடைமிளகாய் – 2
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும். சூப்பரான குடைமிளகாய் புதினா புலாவ் தயார்.
வெள்ளரிக்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 2
துருவிய தேங்காய் – 1 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 6
பெருங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும். துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
துருவிய வெள்ளரிக்காய் மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் ஏற்கனவே தாளித்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான இந்த வெள்ளரிக்காய் பச்சடியை குடைமிளகாய் புதினா புலாவுடன் பரிமாறவும்.
