வீடு கட்ட மேஷ ராசிக்காரர்கள் பகவதி அம்மன் வழிபாடு செய்யணும்!
மேஷத்திற்கு அதிபதி செவ்வாய் பகவான். இவர், பூமிக்காரகன். மேஷத்தை பூமிப் புத்திரன் என்றே சொல்லலாம். இவர்களிடம், வாழ்க்கையில் உங்களது லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று தான் சொல்வார்கள். இந்த ராசிக்காரர்களின் முதல் செலவே வீடாகத்தான் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செம்மண் பூமியாக இருப்பின் நல்லது. அல்லது மணல் பூமியாக இருந்தாலும் நலம் பயக்கும்.
பூமிக்கும் உடம்புக்கும் சம்மந்தமுண்டு. இந்த செம்மண் பூமி அமைந்து விட்டால் ஆரோக்கியத்திற்கு ஒருகுறைவும் வராது. மேஷ ராசிக்கு நான்காவது வீடாக கடகம் வருகிறது. அந்த கடக ராசிக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். அப்படிப் பார்க்கும்போது நீங்கள் வளர்பிறைச் சந்திரனில் பிறந்திருந்தால், வீடு கட்டுவதென்பது எளிதான காரியமாகும்.
வங்கி கடன் உதவிக்கு விண்ணப்பித்தாலும் ஒரு வாரத்துக்குள்ளாக எல்லா விஷயங்களும் ஓகே ஆகும். இதுவே நீங்கள் தேய்பிறை சந்திரனில் பிறந்திருந்தால் ஒரே போராட்டமாகத்தான் இருக்கும். ஜாதகத்தின்படி, குரு பார்வையோ அல்லது குரு, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலோ நல்லது. அந்த தெருவுலயே அவரது வீடு தாங்க பிரமாதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு தெற்கு பார்த்த வாசல் இருப்பது நல்லது. கிழக்கு பார்த்த வாசல் 2ஆவது சாய்ஸ். இதுவே அடுக்குமாடி வீடாக இருந்தால் தரை தளத்தில் வீடு இருப்பது நல்லது.
மேஷத்திற்கு நான்காம் இடமான வீட்டை வழங்கும் கடக ராசியின் அதிபதியாக சந்திரன் வருகிறார். அப்போது உங்கள் ஜாதகத்திலும் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால்தான் வீடு கட்டவே முடியும். அப்படியே சந்திரன் பலவீனமாக அமைந்தாலும் கவலைப்படாதீர்கள்.
சந்திரனை பலப்படுத்தும் சக்தி அம்பாளுக்கு உண்டு. அதுவுமில்லாமல் கடகம் என்பதே கடல்வீடு. அப்போது கடலுக்கு அருகேயே இருக்கும் அம்பாள் எனில் உங்களுக்கு இன்னும் அதிகமான நன்மையை செய்யும். அப்படி இரு அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற தலமே கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரி பகவதியை வணங்க வீடு கட்டும் பணி தொடங்கப்படும்.
