விருச்சிக ராசிக்காரர்கள் கழுகுமலை முருகன் வழிபாடு!
உங்களது வீட்டை நிர்ணயிக்கும் 4ஆவது வீடு என்பது கும்பச் சனி. உங்களது ராசிநாதன் செவ்வாய் பகவான். இவர், சனிக்கு எதிர்மறையானவர். அதனால் வீடு என்றாலே போராட்டம் தான். இரண்டு மூன்று முறை முயற்சித்தும் முடியவில்லை என்ற நிலை தான். அதன் பிறகு அது மீது ஆசையே வராது. நீங்கள் வாங்கும் போது சகுனங்கள் சரியில்லாமல் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். அதுபோல சனிக்கிழமையன்று முன்பணம் கொடுக்காதீர்கள்.
கட்டிடக் காரகன் எனப்படும் சுக்கிரன் உங்களுக்கு நட்பு கிரகமாக வருகிறது. மேலும், அவரே வாழ்க்கைத் துணைக்குரிய வீட்டை நிர்ணயிப்பவராகவும் வருகிறார். அதனால், வாழ்க்கைத்துணை வந்த பிறகு அவரின் தூண்டுதலால் தான் வீடு வாங்குவீர்கள். எப்போதுமே நீங்கள் லோன் விஷயங்களை சரியாக ஏற்பாடு செய்தபிறகு கட்டத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான் வரும். இப்போதும் ஒரு அசட்டு தைரியத்தில் தான் வீடு வாங்குவீர்கள். தினசரி வாழ்க்கையில் கூட பொருளாதார நிலை பாதிக்க கூடாது.
மன்னர்கள், சந்நியாசிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரில் தெருக்கள் பெயர் இருந்தால் உங்களுக்கு நல்லதாகும். மூன்று, நான்கு தெருக்களின் சந்திப்புக்களில் வீடு அமைந்தாலும் நல்லது. பூர்வீகச் சொத்து தங்காது. வக்கீல், ஓய்வுப் பெற்ற நீதிபதி, மனித உரிமை கழக அலுவலர் போன்றோர் உங்களின் எதிர்வீடு, பக்கத்து வீடு என்று இருப்பார்கள். உங்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவரே கும்பச் சனி ஆவார். மகரச் சனியை விட கும்பச் சனி கொஞ்சம் மெதுவாக இயங்கும் ராசியாகும். மேலும், உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாய்க்கு அதிபதி முருகன் ஆவார். பெரும்பாலும் சிறு குன்றுகள் மலைகள் எல்லாமுமே சனியின் ஆதிக்கத்தில் வரும்.
அப்படிப்பட்ட சனியின் ஆதிக்கத்தில் செவ்வாயின் அதிபதியான முருகன் கோயிலை தரிசிக்கும்போது வீட்டு யோகம் உங்களுக்கு எளிதாக அமையும். அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தலமே கழுகுமலை. மேலும் இத்தலத்தில் போர்க் கோலம்போல ஆயுதங்களோடு முருகன் காட்சியளிக்கிறார். இத்தலம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
