ரிஷப ராசியினவர் வழிபட வேண்டிய கோயில் திருவக்கரை வக்ரகாளி!
ரிஷபம் கட்டிடத்தின் நாயகன். இந்த ராசியினருக்கு சுக்கிர பகவான் அதிபதி. இவர், கட்டிட கலைகளுக்கு எல்லாம் அதிபதி. இது வெறும் சுவரா அல்லது கண்ணாடி சுவரா என்று மயக்கும்படி கட்டிடத்தை உருவாக்குவதே சுக்கிரனின் வேலை. இப்படி சுக்கிரனே உங்களுக்கு அதிபதியாக வருவதாலோ என்னவோ வீடு கட்ட வேண்டும் என்று குறியாகவே இருப்பீர்கள். ரிஷப ராசிக்கு சரளை மற்றும் கருப்பு நிற மண்ணாக இருந்தால் நல்லது. நீங்கள் ரிஷப ராசிக்காரராக இருந்தாலும் சரி அல்லது உங்கள் ஜாதகப் பிரகாரம் நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை.
உங்கள் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ நான்காம் இடமாக சிம்ம ராசி வருகிறது. அந்த ராசியை சூரியன்தான் ஆட்சி செய்கிறார். எனவே உங்கள் வீடு குறித்த எல்லா விஷயங்களையும் சூரியன்தான் நிர்ணயிக்கிறார். அடுத்ததாக உங்கள் ராசியான ரிஷபத்திற்கு அதிபதியாக வரும் சுக்கிரனும், சூரியனும் கொஞ்சம் பகைவர்கள் ஆவார்கள். அதனால் மனை வாங்கிப் போட்டால் சீக்கிரம் வீட்டை கட்டவிடாது தடைகள் வரும். உங்கள் ஜாதகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது இந்த ராகுவும், கேதுவும் சூரியனோடு சேர்ந்திருக்கக் கூடாது.
அப்படி இருந்தால் சாலை விரிவாக்கத்தில் வீட்டின் முன்பகுதியை இழப்பீர்கள். மேலும் நல்ல பூமிகூட அமைந்து விடும். ஆனால், பில்டர் ஏமாற்றுவதற்கு முயற்சி செய்வார். ‘‘எல்லாமே ரொம்ப தரமா போட்டிருக்கேங்க’’ என்று சொல்லிவிட்டு மட்டமான மெட்டீரியல்ஸை உபயோகப்படுத்துவார். ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் சொந்த ஊர் வாசனையை விரும்புவார்கள். ரிஷப ராசி அன்பர்கள் வீடு யோகம் பெற வழிபட வேண்டிய தலம் திருவக்கரை ஆகும். வக்ரகாளி எனும் நாமத்தோடு அருள்பாலிக்கிறாள். வலது காலை மடக்கி, இடது காலை கீழே படரவிட்டு, இடது கைவிரல்களை லாவகமாய் மடித்து ஆள்காட்டி விரல் தன் பாதத்தைச் சுட்டுவதுபோல அமர்ந்த கம்பீரம் அவள் பாதம் பணிய வைக்கிறது.